இலங்கை – ஈரானுக்குமிடையில் 05 உடன்படிக்கைகள் கைச்சாத்து…

இலங்கை – ஈரானுக்குமிடையில் 05 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரானுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று(13) ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது.

இருநாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மசகு எண்ணெய், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறையில் தற்போது இருந்துவரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துறையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்துவருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் ரயில் பாதை முறைமையை மேம்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் இருந்துவரும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

மேலும் சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருநாடுகளுக்குமிடையில் மருந்துப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இருதரப்பு பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இணைந்த ஆணைக்குழுவின் கீழ் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பலமாக நடைமுறைப்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

உமா ஓயா திட்டம், கிராமிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்குதல் மற்றும் புகையிரத துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காகவும் ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையில் 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள். தரப்படுத்தல், அளவையியல் பயிற்சிகள். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி.
கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும். ஆகிய துறைகளுடன் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.