இலங்கை உட்பட 5 நாடுகளின் புறக்கணிப்பால் சார்க் மாநாடு ஒத்திவைப்பு.

இலங்கை உட்பட 5 நாடுகளின் புறக்கணிப்பால் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19 மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக பங்களாதேஷ், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய பிற சார்க் உறுப்பு நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. சார்க்கில் உறுப்பினர்களாக உள்ள 8 நாடுகளில் 5 நாடுகள் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சார்க் மாநாட்டை ஒத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளதாவது, இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த சார்க் மாநாடு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநாடு எப்போது நடத்துவது என்பது குறித்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.