(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை உருவாக்குவதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த நோட்டீசை வழங்கினார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமது லபார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இலங்கை கிரிக்கெட்டின் புதிய சாசனத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பக் குழுவொன்றை ஆலோசிக்கவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
புதிய கிரிக்கெட் சாசனத்தை உருவாக்குவதுடன் விளையாட்டுச் சட்டம் மற்றும் அது தொடர்பான விளையாட்டு விதிமுறைகள் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது மனுவை பெப்ரவரி 28-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.