இலங்கை கிரிக்கெட் வீரர்களை உள் அரங்குகளில் பயிற்சி எடுக்க தென் ஆப்பிரிக்கா கட்டாயப்படுத்தியது என தகவல்கள் வெளியாகியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 T20 மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடவுள்ளது.
முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ம் திகதி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வார இறுதியில் மழை பெய்ததால் பயிற்சி ஆடுகளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் இலங்கை வீரர்கள் வாண்டரர்ஸ் மைதான உள் அரங்குகளில் பயிற்சி பெற தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாண்டரர்ஸ் மைதானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Greg Fredericks கூறியதாவது;
“வார இறுதியில் கடும் மழை பொழிந்தது. இதை சரி செய்ய மைதான ஊழியர்கள் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். ஆடுகளம் உலர்ந்தவுடன் இலங்கை வீரர்கள் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யப்படும்” என உறுதியளித்துள்ளார்.