இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி செய்யக் கூடிய சகல தருணங்களிலும் கடன் அல்லாத உதவிகளை வழங்கப் போவதாக ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பானியப் பிரதமருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கும் உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும், துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்கு ஜப்பான் உச்ச ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இலங்கையின் மின்வலு உற்பத்திக்கும் மென்மேலும் உதவிகளை வழங்கப் போவதாக ஜப்பானியப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் ஜப்பானில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. திண்மக்கழிவு முகாமைத்துவம், இடர்காப்பு முகாமைத்துவம் தொடர்பான துறைகளிலும் உதவி செய்ய ஜப்பான் விருப்பம் தெரிவித்தது.
பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் ஜப்பான் வழங்கும் உதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றுப் பேசினார். இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் இரு நாட்டுத்தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.