இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 12ம் திகதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

இதற்காக இந்திய அணி இன்று மாலை சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டு வருகின்றது.

இலங்கை தொடர் குறித்து கெப்டன் வீராட்கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்;

பங்களாதேஷ் தொடர் போல் இல்லாமல் இலங்கை டெஸ்ட் தொடர் முழுமை பெற்றது. பரபரப்பான இந்த போட்டித் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்.

பங்களாதேசத்தில் ஒரு டெஸ்டில் ஆடினோம். அதுவும் மழையால் பாதிக்கப்பட்டது. தற்போது இலங்கையுடன் 3 டெஸ்டில் விளையாடுகிறோம். இதனால் அணியை திட்டமிட்டு இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் நமது அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆக்ரோஷமான அணுகுமுறை உத்வேகம் அளிப்பதற்கு உதவியாக இருக்கும். பரபரப்பான ஆட்டத்துக்கும் உதவியாக அமையும். இதனால் ஆக்ரோஷம் இருக்கும்.

20 விக்கெட்டுகள் கைப்பற்றுவது அவசியமானது. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே மிகச் சிறந்ததாக கருதுகிறேன். 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவோம். அஸ்வின், புவனேஸ்வர்குமார், ஹர்பஜன்சிங் ஆகியோரால் பேட்டிங்கிலும் பங்களிப்பை வெளிப்படுத்த இயலும்.

பந்துவீச்சில் வலிமை இருந்தால் தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும்.

ரோகித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார். ஒருநாள் போட்டியில் அவர் தொடக்க வீரராக விளையாடுகிறார்.

ஆனால் டெஸ்ட் போட்டி முற்றிலும் மாறுபட்டது. அவர் 6–வது வரிசையில் ஆடுகிறார். முன்வரிசையில் அவரை களம் இறக்குவது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை.

மேலும், கெப்டன் பதவியால் எனது பேட்டிங் திறமை பாதிக்காது என்றே கருதுகிறேன்.

ஆதாயம் தரும் இரட்டை பதவி தொடர்பாக கிரிக்கெட் வாரியம் பிறப்பித்த உத்தரவு பற்றி விவாதமோ அல்லது கருத்தோ தெரிவிக்க இயலாது. ஆனால் வீரர்களின் நலன் கருதி தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. இது வரவேற்கதக்க ஒன்றாகும்.

இவ்வாறு வீராட் கோலி பதிலளித்துள்ளார்.

(riz)