இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சுயாதீன நிறுவனமாக முன்னெடுத்துச் செல்ல அரசு தீர்மானம்..

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) சுயாதீன நிறுவனமாக முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மஹாபொல நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகையினை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட, மாலபே பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது, தற்போது தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளுக்கு உரித்தான பட்டங்களை வழங்கும் மிக முக்கிய கல்வி நிறுவனமாகும்.
தற்போது அங்கு சுமார் 7,000 மாணவ, மாணவிகள் கல்வி கற்பதோடு, சுமார் 9,000 பட்டதாரிகள் இதுவரை பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

முதலீட்டாளர்களை கவர்ந்து, வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்நிறுவனத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டியுள்ளது.

மஹாபொல நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையானது, தற்போது முழுமையாக செலுத்தப்பட்டிருப்பதை கவனத்திற் கொண்டு, பட்டமளிக்கும் சுயாதீன கல்வி நிறுவனமாக அந்நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)