இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம்

இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதோடு, அனர்த்தங்களால் பாதிக்கப்படுவோருக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்கும் பொருட்டு தேசிய காப்புறுதி நிதிக்கட்டளையினால் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் குறித்த நிதிக் கட்டளை அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையிலேயே இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி வழங்கப்படும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த காப்புறுதி பணமானது தவணை முறையில் நிதி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.