இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் – விளக்கமளிக்க மஹிந்தவுக்கு கால அவகாசம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று(15) கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததுடன், இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜூலை மாதம் 04ம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.