இலங்கை வீரர்களின் பயிற்சிக்கு அக்ரம் மற்றும் ஆக்ரோஷ சிக்ஸர் நிபுணரை அழைக்க ஏற்பாடு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஸீம் அக்ரம் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆக்ரோஷமான துடுப்பாட்ட வீரரான ஜூலியன் வூட் (Julian Wood)ஆகியோரது சேவையினை பெற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இலங்கை தேசிய பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கவும் தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும் அவர்களை பயன்படுத்துவது நோக்கம் என்றும் கூறப்படுகின்றது.

50 வயது மதிக்கத்தக்க ஜூலியன் வூட் இங்கிலாந்து பிராந்திய வீரராக இருப்பதோடு, விசேடமாக ஆறு ஓட்டங்களை எவ்வாறு பெறுவது தொடர்பில் விசேட ஆராய்ச்சிகளை மேற்கொண்டவரும், அது தொடர்பில் அவர் எகடமி ஒன்றினையும் நடாத்தி வருபவருமாவார்.

எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடலை வெற்றியடையச் செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட அவதானத்தினை செலுத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.