இளசுகளை கொடூரமாய் கற்பழிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தீர்வு தான் எப்போது?

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். ஈராக்கில் யாஷிடி மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதி பலவற்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் யாஷிடி பெண்களையும், கிறிஸ்தவ பெண்களையும் செக்ஸ் (பாலியல்) அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த 3 யாஷிடி பெண்கள் தற்போது அங்கிருந்து தப்பி இங்கிலாந்து வந்துள்ளனர். அவர்கள் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில், புஷ்ரா என்ற பெண் கூறுகையில்;

“கடந்த ஆண்டு எங்கள் கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள பகுதிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். எங்கள் கிராமம் அதன் நடுப்பகுதியில் இருந்தது. நாங்கள் எங்கும் தப்பி செல்ல முடியாதபடி அந்த பகுதி முழுவதையும் முற்றுகையிட்டு இருந்தனர். ஒருநாள் இரவு எங்கள் ஊரை கைப்பற்றினார்கள்.

அந்த ஊரில் இருந்த பெண்கள் அனைவரையும் தனியாக அழைத்து சென்றனர். அதே போல் ஆண்களையும் தனியாக அழைத்து சென்றனர். எங்களை அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று அடைத்தனர்.

ஆண்களை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பெரும்பாலானவர்களை சுட்டு கொன்றனர். இரவு முழுவதும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

மறுநாள் காலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் நாங்கள் இருந்த பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பெண்களை தங்களுக்கு தேர்வு செய்து கொண்டார்கள். அழகான பெண்கள் மற்றும் இளம் பெண்களை தங்களோடு அழைத்து சென்றனர். அதேபோல என்னையும் அழைத்து சென்றனர். அங்கு வைத்து எங்களை கற்பழித்தனர். தினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு இடமாக அழைத்து சென்று கொடுமை செய்தார்கள். ஒவ்வொரு நாளும் மாறி மாறி வேறு வேறு ஆட்கள் எங்களை அழைத்து செல்வார்கள்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 60 வயதில் இருந்து 70 வயது வரை உள்ள முதியோர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தான் மிகவும் கொடுமையாக நடந்து கொண்டார்கள். வயது அதிகமான அவர்கள் சிறுமிகளை தேர்வு செய்து கற்பழித்தனர். ஒரு நாள் இரவு அவர்கள் பிடியில் இருந்து நாங்கள் தப்பித்து விட்டோம்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்..

நூருல் என்ற பெண் கூறியதாவது;

“தீவிரவாதிகளின் கொடுமை தாங்காமல் என்னோடு இருந்த பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். என் தோழி ஒருவர் குளியல் அறைக்குள் சென்று கையை அறுத்துக் கொண்டார். அவர் குளியல் அறைக்குள் சென்று நீண்ட, நேரம் வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே சென்ற தீவிரவாதிகள் அவரை வெளியே இழுத்து சென்றனர். அதன்பிறகு அவர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

என்னோடு பிறந்த 6 சகோதரர்களையும் தீவிரவாதிகள் அழைத்து சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் உயிரோடு இருப்பதாக தகவல் கிடைத்தது. மற்ற 5 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை சுட்டு கொன்று இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

எங்கள் ஊரை சேர்ந்த பெரும்பாலான ஆண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு கொன்றுவிட்டனர். எங்கள் கிராமமே முற்றிலும் அழித்துவிட்டது’’. எனக் கூறினார்.

(riz)