இலங்கையில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாதகாலப் பகுதிக்குள் 160 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோய் பரவும் வேகம் அதிகரித்திருப்பது புலனாகின்றது.
அத்துடன் அண்மைக்காலத்தில் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக 20-25 வயதுப் பருவத்தினரான இளைஞர்களே அதிகளவில் உள்ளனர்.
இதன் மூலம் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இளைஞர்கள் எயிட்ஸ் நோய்க்கு பலியாகும் வேகம் அதிகரித்திருப்பது புள்ளி விபரங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.