இலங்கையின் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதுடன், வாக்குப் பெட்டிகள் யாவும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் நாளை 7 ம் திகதி நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இன்று தேசிய இளைஞர் சேவை கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் கரச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அத்தோடு கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இருந்து கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் இருந்து 2 வேட்பாளர்களும் கரச்சி பிரதேச செயலர் பிரிவில் இருந்து 3 வேட்பாளர்களும் பூநககரி பிரதேச செயலர் பிரிவில் இருந்து 2வேட்பாளர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இருந்து 2 வேட்பாளர்களும் ஆக 9 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை தொகுதி, சேருவில, மூதூர்தொகுதி போன்ற மூன்றிலும் இரண்டு பெண்கள் உட்பட 29பேர் போட்டியிடவுள்ளதாக திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.அலாவுடீன் பாபு தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி இந்த இளைஞர் கழக தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் இதில் பதினெட்டு வயதிலிருந்து 29 வயது வரை வாக்களிக்கும் உரிமை உண்டு.
இம்மாவட்டத்தில் பத்தாயிரத்துக்குட்பட்டடோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் 1615 பேரும், குச்சவெளி பிரதேச செயலகத்தில் 623பேரும்,கந்தளாய் 721,சேருநுவர313, கோமரங்கடவல 685,
மொறவெவ 309, ஈச்சிலம்பற்று 539, பதவிசிறிபுர 302, கிண்ணியா 2652, மூதூர் 1331, தம்பலகமம் 803, பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் இம்மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் இருந்து தலா மூன்று உறுப்பினர்களாக ஒன்பது உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 29 பேர் போட்டியிடுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் ஒரு பெண்ணும், கோமரங்கடவலவில் பெண்ணொருவரும் போட்டியிருகின்றனர் எனவும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.