மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பென்சமின் நெதன்யாகுவால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தனிச் சிறப்பு விமானம் மூலம் நேற்று(04) இஸ்ரேல் சென்ற பிரதமரை பென் குரியன் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு ‘எனது நண்பரே வருக’ என ஹிந்தியில் கூறி கட்டித் தழுவி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஜெருசலேமில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் குறித்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வழிமுறைகள் குறித்தும் இருநாட்டு பிரதமர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
பின்னர் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,
“எதிர்காலத்தை சிறந்ததாக உருவாக்க நாம் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாம் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் ஒருவர் தமது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்பதற்காக 70 ஆண்டுகள் காத்திருந்ததாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மோடி, ‘பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)