சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மொங்கோலியா கனிம வளத்தைக் கொண்ட நாடு. இங்கு நிலவி வரும் அமைதியான சூழலால் வெளிநாடுகள் பலவும் மொங்கோலியாவில் முதலீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இங்கு எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, அரசு மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை மொங்கோலியா விதித்துள்ளது. மேலும், அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கும் ஊடகவியலாளர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகை வழங்கவும் அரசு முடிவுசெய்துள்ளது.
இதை எதிர்க்கும் வகையில் மொங்கோலியாவின் பத்திரிகைகள் தமது நேற்றைய பதிப்பின் முதல் பக்கத்தில், ‘உங்கள் தகவலறியும் உரிமைச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது’ என்ற வார்த்தைகளை மட்டுமே தாங்கி வெளிவந்துள்ளன.
இதே வார்த்தைகளை, அந்நாட்டின் செய்தி இணையதளங்களும் தமது முகப்புப் பக்கங்களில் நேற்றைய தினம் பதிவேற்றியிருந்தன.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள், அரசு தம்மீதான கறையைத் துடைத்துக்கொள்ளாமல் அதைச் சுட்டிக்காட்டும் தம் மீது கண்டிப்புக் காட்டுவதாகவும், சொற்ப சம்பளமே பெறும் தம்மால் செலுத்த முடியாத அபராதத்தை விதிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
