உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றிற்கு சத்திய கடதாசி..

உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்து, உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் பண்டாரவளை பிரதேசவாசிகள் நான்கு பேர் இன்று(11) உயர் நீதிமன்றில் சத்திய கடதாசியொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

உரிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை இன்றி குறித்த இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக , பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உமா ஓயா திட்டம் தொடர்பில் இந்த குழுவினர் இதற்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இதன்போது சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த திட்டத்துடன் தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

இன்றைய தினத்தினுள் அதனை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மூவரடங்கிய நீதவான் குழுவினர், மீண்டும் எதிர்வரும் 29ம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ளனர்.

 

 

(rizmira)