உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப பிரிவு உள்ளடங்களாக ஆறு பிரிவுகளின் அடிப்படையில் இம்முறை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன.

தொழில்நுட்ப பிரிவின் கீழ் சுமார் 14000 மாணவ மாணவியர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இவர்களில் இரண்டாயிரம் பேர்  தொழில்நுட்பத்துறை பட்டக் கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழங்களில் உள்வாங்கப்படவுள்ளனர்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் புஸ்பகுமார  தெரிவித்துள்ளார்.