(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
காலி முகத்திடல் தாக்குதலின்போது மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்ற அடிப்படையில் தான் அனைத்துக் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றியதாக பொலிஸ் மா அதிபருக்கு மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கமையவே தான் இந்த விடயத்தில் செயற்பட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் காரணமாக 24 வருட அனுபவத்தைக் கொண்ட பொலிஸ் அதிகாரி என்ற தனது நற்பெயருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.