உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கிய பொதுமகனுக்கு 50 இலட்சம் சன்மானம்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்கள் தொடர்பிலும் தகவல் வழங்கிய ஒருவருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் சன்மானங்களை வழங்கி கெளரவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாரிகள் பயன்படுத்திய லொறி , வெடிபொருட்களுடன் நீர்கொழும்பு , கடுவாப்பிட்டியவில் இருந்து சாய்ந்தமருது வரை சென்றுள்ளது. இது தொடர்பில்  குறிப்பிட்ட நபர் வழங்கிய தகவல்களை வைத்து 2019.04.26 அன்று சம்மாந்துறை சங்கள் கிராம பிரதேச வீடொன்றில் ஒளித்து வைத்திருந்த பெரும் தொகையான வெடிபொருட்களை காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

அதே போல் அவரால் வழங்கப்பட்ட மற்றுமொரு தகவலின் அடிப்படையில் 2019.04.26 அன்று நிந்தவூர் பிரதேச வீடொன்றில் ஒளித்து வைத்திருந்த பெரும் தொகையான வெடிபொருட்களையும்  காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட நபர் வழங்கிய இரு சரியான  தகவல்களும் குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உதவியதால் 25 இலட்சம் படி இரு தகவல்களுக்குமாக 50 இலட்ச ரூபா சன்மானம் வழங்கப் பட உள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.