கேகாலை, போகலையிலுள்ள சுரங்கமொன்றில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், தங்களது சம்பள உயர்வு மற்றும் ஊழியர் நலன்கள் என்பவற்றைக் கோரி, 1,670 அடி ஆழமான சுரங்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திவருவதாக, நிறுவனங்களுக்கிடையிலான ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
5,000 ரூபாய் சம்பள உயர்வு, பண்டிகைக்கால விடுமுறைகள், காப்புறுதி மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கோரியே இப்போராட்டம் நடத்தப்படுவதாக, அச்சங்கத்தின் உப செயலாளர் ரி. ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஊழியர்கள் 50 பேர் சுரங்கத்தினுள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் 150 பேர் வரை நிலப்பகுதியில் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
சில தொழிலாளர்கள், வெறும் சாரம் மட்டும் அணிந்து கொண்டு வேலை பார்ப்பதாகவும் அவர்களுக்கான சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.