உல்லாசப் பயணிகளின் விசாக் கட்டணத்துடன் இடங்களைச் சுற்றிப் பார்க்கும் மேலதிக கட்டணத்தையும் சேர்த்து அறவிடும் திட்ட த்தை அறிமுகப்படுத்த இலங்கையில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு வரும் உல்லாசப் பயணிகள், தாம் சுற்றிப் பார்க்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களத்தின் பதில் மேலதிகப் பணிப்பாளர் நாயகமான பிரசன்னா ரட்ணாயக்க;
ஏனைய நாடுகளில் இருப்பது போல, ஒரு குறிப்பிட்ட தொகையை விசாக் கட்டணத்துடன் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தும்படி கோரியுள்ளார். உதாரணத்திற்கு பூட்டானில் உல்லாசப் பயணிகளிடம் இதற்காக நாளொன்றுக்கு 265 டொலர்கள் வசூலிக்கப்படுவதை இவர் சுட்டிக்காட்டினார்.
சிகிரியா போன்ற இடங்களுக்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கு கொடுக்கப்படும் நுழைவுச்சீட்டுகள், உள்நாட்டு உல்லாசப் பயணிகளின் சீட்டுகளை விட விலை உயர்ந்தவையென்றும் இவை வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடமிருந்து மீளப் பெறப்பட்டு மீண்டும் விற்கப்படுகின்றன என்றும் இவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயத்தில் பல மோசடிகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும் இவர் எடுத்துக்காட்டினார். இப்படியான மோசடிகளைத் தவிர்க்க ஈ-டிக்கற்றுகள் எனப்படும் மின்னியல் சீட்டுகளை வழங்கினால் அது சாத்தியப்படுமென இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டவர்கள் 20 ரூபா செலுத்துமிடத்தில், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 1000ரூபா தொகையை நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி வருகின்றார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.