தங்களை உளவு பார்த்ததாகக் கூறி ரஷியர் ஒருவரின் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அதன் விடியோவை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய பிறகு, ரஷியரைப் படுகொலை செய்து அந்த அமைப்பு வெளியிடும் முதல் விடியோ இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த விடியோவில் தோன்றிய பயங்கரவாதி, ரஷிய மொழியில் பேசினார். ரஷிய அரசுக்கு நேரடியாக சவால் விட்ட அவர், சிரியாவில் ரஷியா தோல்வியடையும் எனவும், ரஷியப் படையினர் கொல்லப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
வீடியோவில் இறுதியில், உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி ரஷியர் ஒருவரின் தலையைத் துண்டித்து அந்தப் பயங்கரவாதி படுகொலை செய்தார். சிரியாவில், அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மீது ரஷியா கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி முதல் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
ரஷியர்களைப் படுகொலை செய்யும் வீடியோவை ஐ.எஸ். வெளியிடுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, உளவுக் குற்றச்சாட்டின் பேரில் இரு ரஷியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெறும் சிறுவன் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டமையும் நினைவுகூறத்தக்கது