உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தக்கோரி நாடாளுமன்றில் பிரேரணை.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தக்கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று(25) பிற்பகல் ஒரு மணியளவில் கூடவுள்ளது.

இன்றைய நாளுக்குரிய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக இதனைக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த ஒரு வருடமும், 3 மாதங்களுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக கிராம மட்டங்களில் பொது மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, வாக்காளர்களது வாக்குரிமையும் மீறப்பட்டிருப்பதாகவம் பந்துல குணவர்தன மேலும் குற்றம் சாட்டினார்.