உள்ளூராட்சி மன்றங்களது ஆட்சியை, கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக தங்களது விருப்பத்திற்கமைய நிறுவ நடவடிக்கை எடுத்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி வாக்கெடுப்பு சட்டத்தின் கீழ் கட்சியின் பொதுச் செயலாளரினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருப்பதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களது ஆட்சி அமைக்கப்படுவது தொடர்பில் சட்டவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இடம்பெறும் பெரும்பான்மையற்ற உள்ளூராட்சி மன்றங்களது ஆட்சி அமைப்பின் மூலம் உண்மையான மக்கள் விருப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நகர முதல்வர், தலைவர் தெரிவுகளின் போது குலுக்கள் முறையோ, நாணய சுழற்சி முறையோ பின்பற்றப்படுவதானது, மக்கள் வழங்கிய ஆணையை அவமதிக்கும் செயலாகும் என கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர், ப்ரதீபா மஹாநாமஹேவா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.