ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தல் தொடர்பில் DIG தென்னகோனிடம் CID வாக்குமூலம்..

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேல் மாகாண, வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ​ தென்னகோனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் எம்பில்தெனிய பிரதேசத்தில் வைத்து வௌ்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, வீதியில் வீசிச் செல்லப்பட்டிருந்தார்.

இவர் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உள்ளானமைத் தொடர்பில் மிரிஹான பொலிஸார் இந்த விடயத்துடன் சம்பந்தம் இல்லாத இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபர் ​ தென்னகோன் நுகேகொட பிரிவுக்கு பொறுப்பாக இருந்தமையால், இந்த கைது தொடர்பில் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி போத்தல ஜயந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.