ஊழல் குற்றச்சாட்டின் எதிரொலி – ஜப்பான் மந்திரி திடீர் ராஜினாமா

ஜப்பான் நாட்டின் பொருளாதார மந்திரி அகிரா அமரி (வயது 66), ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் இருந்து இவர் பெரிய அளவில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக அகிரா அமரி நேற்று திடீரென பதவி விலகினார்.

இதற்கான அறிவிப்பை அவர் டோக்கியோவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, “ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், கேபினட் மந்திரி என்ற பொறுப்பில், அரசியல்வாதி என்ற பெருமிதத்தில், நான் எனது பதவியில் இருந்து விலகுகிறேன்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “ஜப்பான் வலிமையான பொருளாதார நாடாக உருவாக வேண்டும். அதை பாதிக்கிற எந்தவொன்றையும் நாம் ஒழிக்க வேண்டும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. எனவே (என் உதவியாளர் செய்த ஊழலுக்கு) பொறுப்பேற்று பதவி விலகுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.