நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் காரியாலயங்களையும் மூடி தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்குரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 19ம் திகதி நள்ளிரவு முதல் 21ம் திகதி நள்ளிரவு வரை போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களத்தை இயற்கை மரணம் எய்தச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
தபால் திணைக்களத்தை இயற்கை மரணம் எய்தச் செய்யும் அரசாங்கத்தின் நோக்கத்தை தோற்கடிப்பதே இந்தப் போராட்டத்தின் இலக்கு. தபால் திணைக்களத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையினால் 19,000 ஊழியர்களின் தொழில்கள் ஆபத்தில் சிக்கியுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பளம் தொடர்பான முரண்பாடு, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தலைமை காரியாலயத்தை துரித கதியில் அங்குரார்ப்பணம் செய்தல், தபால் திணைக்கள வெற்றிடங்களை நிரப்புதல், தொழில் யாப்பினை தயாரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.