எதிர்வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

எதிர்வரும் நாட்களில் நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் இந்நிலை தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் இன்று(18) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60Km வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுவதோடு, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40Km வரை காணப்படும்.

நீர்கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60Km வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

R.Rishma