எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் FCIDக்கு மூடுவிழா

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு எதிர்வரும் 30ஆம் திகதிவரை செயற்படுவதுடன் அதன் பின்னர்  கலைத்து விடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை  முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

இலஞ்சம், ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இல்லாது செய்வதற்கு இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வு துறையினரிடம் வாக்கு மூலமளிக்கச் சென்றிருந்த போது, இந்த நிலைமை குறித்து அங்கிருந்த அதிகாரிகளின் ஊடாக இது தனக்கு தெரியவந்ததாகவும் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதற்கமைய, இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிதிக் குற்றப் புலனாய்வு துறையின் காலம் நிறைவடைவதால் அதன் பின்னர் அதனை நீடிக்காமல் கைவிடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டதாகவும் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டினார்.