எதிர்வரும் 30ம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்விவகார அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மறைந்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ளதையடுத்தே அன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்னாருடைய இறுதிக் கிரியைகள் ஹொரண விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரனையுடன் இடம்பெறும் என்றும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார்.
அன்றைய தினம் மதுபானசாலைகள் மூடப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் அது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என்றார்.
அதேவேளை மறைந்த ரத்னசிறி விக்ரமநாயக்கவின் உடல் இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
இன்று காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார்.