”எதிரிகளை தாக்கி அழிப்பது, எப்படி என்று, அமெரிக்க அரசு தான் எனக்கு பயிற்சி அளித்தது,” என, தஜிகிஸ்தான் முன்னாள் பொலிஸ் படை உயரதிகாரியும், தற்போது ஐ.எஸ். ஐ.எஸ்., அமைப்பின் தளபதியுமான, குல்முராட் கலிமோவ் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர், துப்பாக்கி, வெடிகுண்டுகள் சகிதமாக, வலைதளம் ஒன்றில் தோன்றி பேசியதாவது; சர்வதேச நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாத தடுப்பு பயிற்சிக்காக, தஜிகிஸ்தான் சார்பில், மூன்று முறை அமெரிக்கா சென்றேன். அங்கு, எதிரியை எப்படி தாக்கி, அழிப்பது உள்ளிட்ட, பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்பட்டன. இஸ்லாமியர்களை தாக்குவதற்கு தரப்பட்ட பயிற்சியே, என் மனதை மாற்றி விட்டது.
அதனால், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் சேர்ந்து விட்டேன். இனி, ‘நாங்கள் உங்கள் நகரங்களுக்கு வருவோம். உங்கள் வீடுகளுக்குள் புகுந்து, உங்களைக் கொல்வோம்.’ இவ்வாறு, அவர் கூறியுள்ளார்’ இது குறித்து, அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு பயிற்சி திட்ட, செய்தி தொடர்பாளர் பூஜா ஜுஜுன் வாலா கூறுகையில், ”கலிமோவ், 2003 – 2014 வரை, அமெரிக்கா, தஜிகிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற ஐந்து பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டார்; அவரே எதிரியாவார் என்று அப்போது தெரியாது,” என்று தெரிவித்து உள்ளார்.ஐ.எஸ்.ஐ.எஸ்., மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை மூளைச் சலவை செய்து அமைப்பில் சேர்த்து வருகிறது.