என்னிடம் உள்ள துரும்புச் சீட்டை பயன்படுத்த வைக்காது, என்னை சீண்டுவதனை சம்பந்தப்பட்டோர் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..- மைத்திரி…

தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துருப்புச் சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க வேண்டி ஏற்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(08) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் கூறுகையில்;

“… எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். இதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆட்சியை கைப்பற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இருப்பினும் அதனால் எந்ததொரு பயனும் ஏற்பட போவதில்லை. நாமும் அவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

அந்த வகையில் என்னிடம் கைவசம் பல்வேறு அஸ்திரங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் ஏதும் கொடுக்க வேண்டுமானாலும் அதனையும் செய்வேன்.

இதனால் என்னுடன் வீணாக விளையாடுவதனை சம்மந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்..” என தெரிவித்துள்ளார்.