எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி குறித்த சம்பவம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதங்கள் நடத்தப்படவுள்ளன.
விருந்துபசாரமொன்றின் போது பொலிஸாருக்கும் விருந்துபசாரம் நடத்திய தரப்பினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது, இந்த மோதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சபை ஒத்தி வைப்பு விவாதமொன்று நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு அமைய எம்பிலிபிட்டி சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி சபை ஒத்தி வைப்பு விவாதம் நடத்த அரசாங்கம் இணங்கியுள்ளது.
எதிர்வரும் 26, 27, 28 மற்றும் 29ம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
இன்னும், எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணமான சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே விமர்சனம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, சுஜீவ சேனசிங்க ஆகியோர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.