பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தனது கணவர் தயாரில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் இடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அனோமா பொன்சேகா ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பதவிக்காக பலரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், சரத் பொன்சேகாவின் பெயரும் அதில் அடங்குவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.
இது தொடர்பில் இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து மேற்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை எதிர்வரும் 9 ஆம் திகதி புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்கவுள்ளதாகவும் அதில் சரத் பொன்சேகாவின் பெயர் இன்னமும் உறுதியாகவில்லை எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.