காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த எவன்காட் நிறுவனத்துக்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கை, இன்று திங்கட்கிழமை (12) பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதன் பிற்பாடு சுயாதீனக்குழுவொன்று, இதனுடன் தொடர்புடைய வழக்கை விசாரணை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். சிவில் சட்டத்தின் பிரகாரம், இதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறித்த கப்பல் துறைமுகத்துக்கு வருவதற்கு முன்னர் எவன்காட் நிறுவனத்தால் கடற்படையினருக்கு கொடுக்கப்பட்ட ஆவணத்தில், கப்பலில் ஆயுதங்கள் இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தக் கப்பலின் தலைவர் இலங்கையர் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின்னர், அந்த கப்பலில் தலைவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
இதேவேளை, கப்பலில் கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் ரக்னா லங்கா நிறுவனத்துக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
(riz)