ஏமன் நாட்டில் இராணுவ சமையல் கூடத்தின்மீது நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் அங்கு சமையலில் ஈடுபட்டிருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்தப் போரில், அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
தலைநகர் ஏடனில், அல் டெராயின் பகுதியில், ஏமன் படையினருக்கும், சவுதி அரேபிய கூட்டுப்படையினருக்கும் உணவு சமைக்கிற இராணுவ சமையல் கூடம் உள்ளது. அங்கு நேற்று சமையல் கலைஞர்கள் சமையலில் ஈடுபட்திருந்த வேளை, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் ஓட்டிச்சென்று சமையல் கூடத்தின்மீது மோதினார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில், அங்கு சமையலில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் குண்டு தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.