இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்றுள்ளது.
ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் தேர்தல் கூட்டணி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களுக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவும், ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பு மனு கிடைக்காத மாவட்டங்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கு கட்சியில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஒப்பந்தத்தில் எதிர்வரும் நாட்களில் கையொப்பமிடவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், ஐ.தே.கவின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம மற்றும் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கபீர் காசிம் ஆகியோர் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(riz)