ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் முகமாலைக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.