ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்காவிடமிருந்து தரைப்படை

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி, முக்கிய நகரங்களை வசப்படுத்தி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா அந்த நாடுகளில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.

இந்நிலையில், அங்கு தரைப்படைகளை நேரடியாக களம் இறக்க தீர்மானித்து இருப்பதாக அமெரிக்கா சூசகமாக தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் ராணுவ மந்திரி ஆஷ் கார்ட்டர் கூறும்போது, “ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய இலக்குகளை குறிவைத்து இன்னும் கூடுதலான வான்தாக்குதல்கள் நடத்த வேண்டும். மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் தகுதி வாய்ந்த கூட்டாளிகளுடன் வான்வழி தாக்குதல் நடத்துவதில் இருந்தும், களத்தில் நேரடியாக தரைப்படை கொண்டு தாக்குதல் நடத்துவதில் இருந்தும் பின்வாங்க மாட்டோம். எங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்த விரும்புகிறோம்” என குறிப்பிட்டார்.

இதுவரை அமெரிக்கா தரைப்படையை இவ்விரு நாடுகளிலும் களம் இறக்கவில்லை. இந்த நிலையில் தரைப்படையையும் அந்த நாடு நேரடியாக களம் இறக்க முடிவு எடுத்திருப்பதையே இவ்வாறு சூசகமாக உரைத்திருப்பதாக கருதப்படுகிறது.