ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் மற்றொரு ‘ஜிகாதி ஜான்’ உருவாகியிருக்கிறான். அவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன்.
சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் இங்கிலாந்து ராணுவத்துக்கு உளவாளியாக இருந்த 5 பிணைக்கைதிகளை முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது.
பிணைக் கைதியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் ஜிகாதி ஜான்–2 என அழைக்கப்பட்டான். அவன் இங்கிலாந்தை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. அவனது பெயர் அபு ருமாசயா (32). இவனது உண்மையான பெயர் சித்தார்த்ததார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இவன் பிறப்பால் இந்து. பின்னர் இவன் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். ஆயிஷா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவள். எனவே, அவனும் தீவிரவாதியாக மாறினான். லண்டனில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தான்.
வீடியோவில் வெளியான குரலை வைத்து அவன் சித்தார்த்ததார் தான் என தாயாரும், சகோதரியும் தெரிவித்தனர். இதை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
ஜிகாதி ஜான்–2 என அழைக்கப்படும் அபு ருமாசயா இங்கிலாந்தில் கடந்த 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டான். அப்போது தனது மனைவி ஆயிஷாவுடன் சிரியாவுக்கு தப்பி ஓடிவிட்டான்.
இதற்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் முகமது எம்வாசி (27) என்ற இங்கிலாந்துக்காரர் ‘ஜிகாதி ஜான்’ என அழைக்கப்பட்டான். கடந்த ஆண்டு நவம்பர் 12–ந்தேதி சிரியாவின் அல்ரக்காவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்டான்.