ஐ.எஸ். மீதான தாக்குதலை தொடங்கியது ஈராக்

ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை ஈராக் ராணுவம் நேற்று (13) தொடங்கியது.

இதுகுறித்து கூட்டு ராணுவத் தலைமையகச் செய்தித் தொடர்பாளர் யாஹா ரசூல் தெரிவிக்கையில்;

அன்பார் மாகாணத்திலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்.

அரசுக்கு ஆதரவான ஷியா பிரிவுப் படையினரும், சன்னி பிரிவுப் படையினரும் ராணுவத்துடன் இணைந்து இந்நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் எனக் கூறினார்.

இந்த நடவடிக்கையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல் இடம் பெறுமா என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே, அன்பாரை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டும், இதுவரை அந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)