சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான ஷஷாங் மனோகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சீனிவாசன், கடந்த ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராக பதவியேற்றார். அடுத்த ஆண்டு ஜுன் மாதம்வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையில் இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான ஷஷாங் மனோகர் தலைமையில் நடைபெற்ற 86வது ஆண்டாந்திர கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஐ.சி.சி., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்கி ஷஷாங் மனோகர் நடவடிக்கை எடுத்துள்ளார். அடுத்த ஆண்டுவரை இந்தியாவிடம் இருக்கும் இந்த தலைவர் பதவிக்கான பொறுப்புகளை அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை ஷஷாங் மனோகர் கவனித்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, ஷஷாங் மனோகரால் ஐ.சி.சி., தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனால் அவருக்கு பதிலாக சரத் பவார் கலந்துகொள்வார் என தெரிகிறது.