இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்டு இலங்கையின் ராஜதந்திரிகள் நேற்று(13) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளனர்.
ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை, இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மாநாட்டின் 30வது அமர்வின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.
இவ்வமர்வின் போது அவர் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவை கோரவுள்ளார்.
மேலும், எதிர்வரும் 30ம் திகதியன்று இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார்
இன்னும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்ற அறிக்கைக்கு ஐந்து நாட்களில் அரசாங்கம் பதிலறிக்கை வழங்கவுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் விரைவில் பதிலறிக்கை அளிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து மூலம் இந்த பதிலறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளக விசாரணைகள் மற்றும் பூரண நல்லிணக்க முனைப்புக்களையும் அடிப்படையாகக் கொண்ட வகையில் இந்த பதிலறிக்கை அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
(riz)

