ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைய இலங்கை ஆமோதிப்பு

நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒப்பந்தம் அல்லது ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

1997-ல், ஆட்களுக்கு எதிரான கண்ணி வெடிகளை உபயோகித்தல், சேமித்து வைத்தல், தயாரித்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை தடைசெய்து அவற்றை அழிப்பது சம்பந்தமாக உருவாக்கப்பட்டதே ஓட்டோவா ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் 1999ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.