நாம் குடிக்கும் நீரானது மூட்டு இணைப்புகள், கண்கள், உள்ளுறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர், மலம் மற்றும் மூச்சை வெளியிடும் போது என பலவாறு நீர் வெளியேறுகிறது.
உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் உடல் வறட்சியுடன் இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைக் கொண்டு நாம் குடிக்கும் தண்ணீர் உடலுக்கு போதவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒருவர் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.
அடிக்கடி தாகம்:
தண்ணீர் குடித்த சில நிமிடங்களிலேயே அதிக தாகத்தை அடிக்கடி உணர்ந்தால், அவர்களது உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம். அதோடு நாக்கு, உதடு போன்றவையும் மிகுந்த வறட்சியுடன் இருக்கும். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
சிறுநீர் கழிப்பது குறையும்:
உடலில் நீரின் அளவைப் பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் உள்ள நீர் அதிகளவு சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுகிறது. உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், மூளையில் உள்ள உணர்ச்சி வாங்கிகள் ஆன்டி-டையூரிக் ஹார்மோன்களை வெளியிடுமாறு சமிஞ்கைகளை அனுப்பும். இந்த ஹார்மோன்கள் சிறுநீரகங்களை அடைந்து செல்லுலார் நீர் கால்வாய்களான அக்குவாபோரின்களை உருவாக்கி, சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தத்தில் இருந்து நீரை பிரித்தெடுக்காமல் தக்க வைக்கும். இதன் காரணமாக சிறுநீரின் அடர்த்தி அதிகமாவதோடு, கழிக்கும் சிறுநீரின் எண்ணிக்கையும் குறையும். அதுமட்டுமின்றி, சிறுநீரின் நிறம் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். முக்கியமாக ஒருவர் 8 மணிநேரத்திற்கும் மேல் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலோ அல்லது ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
பலவீனமான அல்லது வேகமான துடிப்பு:
எப்போது ஒருவர் போதுமான அளவில் நீரை குடிக்காமல் இருக்கிறாரோ, அவரது உடலில் இரத்தத்தின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால் இதயத்தில் இருந்து உடலுறுப்புகளுக்கு இரத்தம் அனுப்புவதில் சிரமம் ஏற்படும். அதாவது இதயம் அளவுக்கு அதிகமான வேலையில் ஈடுபட வேண்டியிருக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் இதயத்துடிப்பு பலவீனமாகவும், இன்னும் சில நேரங்களில் வேகமாகவும் இருக்கும்.
ஒற்றைத் தலைவலி:
ஒருவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். எப்படியெனில், இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், குறைவாக இருக்கும் போது, மூளையில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பித்து, கடுமையான தலைவலிக்கு உள்ளாக்கும்.
தலைச்சுற்றல்:
உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும் போது, இரத்த அழுத்தம் குறைந்து, அடிக்கடி மயக்கம் அல்லது தலைச்சுற்றலை அனுபவிக்க நேரிடும். முக்கியமாக திடீரென உட்கார்ந்து எழும் போது அல்லது உட்காரும் போது இம்மாதிரியான தலைச்சுற்றல் ஏற்படும்