ஐதராபாத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நாய்களுக்கென பிரத்யேகமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா போன்ற பொது இடங்களில் நடை பயிற்சி செய்பவர்கள் தங்களது செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த குறைய போக்க ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
இதற்காக கொன்டாப்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடத்தை சீரமைத்து 1.3 ஏக்கர் அளவில் சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் அழகிய பூங்காவை உருவாக்கியுள்ளனர்.
இந்த பூங்காவில் நாய்களுக்கான நீச்சல் குளம், நடை பயிற்சிக்கான புல்வெளிகள், குளிப்பாட்டும் இடம், விளையாடும் இடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நாய்களுக்கான பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சாதனங்களும் உண்டு. கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் நாய்களை வளர்ப்பதால் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தும் எண்ணம் தோன்றியதாக அந்த மண்டலத்தின் மாநகராட்சி கமிஷனர் ஹரிசந்தனா குறிப்பிட்டுள்ளார்.





