சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று(04) அதிகாலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் சாஜாவில் இருந்து கல்ப் விமான சேவைக்கு சொந்தமான G 9501 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பகுதியை சேர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இரு வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பயணப் பொதியில் இருந்து 242 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 48,400 சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 2,662,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.