ஒரே படத்தில் ரஜினி – கமல்…

ஒரே படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் நடிக்க வைத்து இயக்குவது என்பது சவால்கள் நிறைந்தது என்றார் இயக்குனர் அட்லி.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: நடிகர்களுக்காக நான் எழுதிய கதைகள்தான் ராஜா ராணி, தெறி, மெர்சல். 7 ராகங்கள் இருப்பது போல், கதைகளும் ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கின்றன. என் படங்களுக்கான கதைகளை மக்களிடம் இருந்துதான் உருவாக்குகிறேன். எனக்கு என்ன தகுதி என்று நினைத்து சம்பளம் கொடுக்கிறார்களோ அதைத்தான் வாங்குகிறேன்.

பொன்னியின் செல்வன் மாதிரி வரலாற்றுச் சம்பவங்களை வைத்து படம் இயக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். ரீமேக் செய்வதாக இருந்தால், பாட்ஷா படத்தை ரீமேக் செய்வேன். அதுவும் ரஜினிகாந்தை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் இணைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தால், அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செய்வேன்.

அதுபோல் விஜய், அஜீத்குமாரை இணைத்து படம் இயக்கக் கேட்டாலும் செய்வேன். சிலர் என்னை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை, ஆர்வமும் இல்லை. என் முழு கவனமும் டைரக்‌ஷனில் மட்டும்தான் இருக்கிறது.