‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்,’’ என, இலங்கை அணியின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் ‘சுழல்’ வீரர் ஹேரத், 37. இதுவரை 63 டெஸ்ட் (278 விக்.,), 71 ஒரு நாள் (74), 9 ‘டுவென்டி–20’ (12) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறுகையில்;
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு என்னிடம் தற்போது இல்லை. காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை. பவுலிங் பற்றி எவ்வித உத்தரவாதமும் என்னால் தர முடியாது.
இன்னும் எவ்வளவு காலம் அணியில் நீடிப்பேன் என சொல்ல முடியவில்லை. ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, டெஸ்டில் கவனம் செலுத்த உள்ளேன். இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை ‘டுவென்டி–20’ (2016) தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன். இத்தொடரின் ‘நடப்பு சாம்பியனான’ நாங்கள், மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
(riz)