ஜேர்மனி நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்த காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ.490 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஜேர்மனி நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பவர்கள் மீது கடந்த 1871ம் ஆண்டில் முதன் முதலாக வழக்கு பதியப்பட்டது.
எவ்வித குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் கூட ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியை சேர்ந்த சுமார் 1,40,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் 50,000க்கும் மேலானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனினும், இந்த சட்டம் 1960களில் பயன்படுத்தப்படாத நிலைக்கு சென்றது. கடந்த 2002ம் ஆண்டு இச்சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
ஆனால், மனித உரிமைகளுக்கு எதிரான வகையில் சிறையில் அடைக்கப்பட்ட 50,000க்கும் மேலானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஜேர்மன் நாட்டு சட்ட அமைச்சரான Heiko Maas என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு சுமார் 30 மில்லியன் யூரோவுக்கும்(491,88,66,795 இலங்கை ரூபாய்) மேலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொகையை பெறுவதற்கு சுமார் 5,000க்கும் மேலான ஓரினச்சேர்க்கையாளர்கள் முன்வருவார்கள் என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.